தொழிலதிபர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில் மேலும் மூவர் கைது @ கோவை

By செய்திப்பிரிவு

கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் மேற்கு ஆரோக்கிய சாமி வீதியை சேர்ந்தவர் கமலேஷ் ( 50 ). தொழிலதிபரான இவரது வீட்டில் கடந்த மாதம் 25-ந் தேதி புகுந்த மர்ம நபர்கள் குடும்பத்தினரை கட்டிப்போட்டு, ரூ.13 லட்சம் பணம் மற்றும் 50 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். தனிப்படையினர் 600-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, நடுப்பாளையத்தை சேர்ந்த சூரிய பிரகாஷ் ( 27 ), ஜூலியட் ஆரோக்கிய ராஜ் ( 32 ), விருதுநகரைச் சேர்ந்த தமிழரசன் ( 32 ), பூபதி ( 31 ) ஆகிய நால்வரை போலீஸார் சமீபத்தில் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மொத்தம் 16 பேர் கொண்ட கும்பல் இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் கோவையில் உள்ள பெரிய செல்வந்தர்களின் வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டதும் அம்பலமானது.

இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய திருச்சி சோம சுந்தரம் நகரை சேர்ந்த பிரவீன் ( 30 ), அஜித் என்கிற சண்முகம் ( 26 ), திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ் என்கிற அருள்பாண்டி ( 34 ) ஆகிய மேலும் 3 பேரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 9 பேரை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE