காசிமேட்டில் ரவுடி கொலை: 5 பேர் கும்பலுக்கு தனிப்படை போலீஸ் வலை

By செய்திப்பிரிவு

சென்னை: காசிமேட்டில் ரவுடி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 5 பேர் கொண்ட கும்பலை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை காசிமேடு பவர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (24). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள காசிபுரம் சென்ற வெங்கட்ராமன், அங்குள்ளவர்களிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த 5 பேர் கும்பல், கத்தியால் வெங்கட்ராமனை சரமாரியாக தாக்கி உள்ளனர். உயிர் பிழைக்க தப்பி ஓடிய வெங்கட்ராமனை விரட்டி அக்கும்பல் வெட்டியுள்ளது. பின்னர், அங்கிருந்து தப்பி ஓடியது.

இதுபற்றி தகவலறிந்து வந்த காசிமேடு போலீஸார், வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வெங்கட்ராமனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வெங்கட்ராமன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து தப்பியோடிய கொலையாளிகளை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். முதல்கட்டமாக சம்பவ இடம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து அதை அடிப்படையாக வைத்து துப்பு துலக்குகின்றனர். முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE