‘கடைசி விவசாயி’ படத்தில் நடித்த மூதாட்டியை கொன்ற மகன் கைது

By செய்திப்பிரிவு

மதுரை: உசிலம்பட்டி அருகே ‘கடைசி விவசாயி’ படத்தில் நடித்த மூதாட்டியை அடித்துக் கொன்ற மகனை போலீஸார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகிலுள்ள ஆனையூரைச் சேர்ந்தவர் பால்சாமி. இவரது மனைவி காசம்மாள் (70). இவர்களுக்கு நமக்கோடி (52), தனிக்கொடி(50) என்ற மகன்களும், ஈஸ்வரி(43) என்ற மகளும் உள்ளனர். மூத்த மகன் நமக்கோடிக்கு திருமணமாகி, பிள்ளைகள் உள்ளன. கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். கடந்த 8 ஆண்டாக நமக்கோடி அவரது தாயாருடன் வசிக்கிறார். மது பழக்கமுள்ள அவர், தாயாரிடம் அடிக்கடி செலவுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். நேற்று முன்தினமும் பணம் கேட்டு சண்டை போட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை கட்டிலில் தூங்கிய காசம்மாள் கட்டையால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த உசிலம்பட்டி தாலுகா போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடலை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், மகன் நமக்கோடியால் காசம்மாள் கொல்லப்பட்டது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, மகனை போலீஸார் கைது செய்தனர். நமக்கோடி மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதன் காரணமாக அவர் தாயாரை தாக்கி கொலை செய்திருப்பதும் தெரிந்தது. காசம்மாள் ‘கடைசி விவசாயி’ என்ற திரைப்படத்தில் வயதான பாட்டி வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE