மைசூரில் 12 ஆண்டுகள் கணவனால் வீட்டுக்குள் பூட்டி வைக்கப்பட்ட பெண் மீட்பு!

By செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் மைசூருவில் கணவனால் 12 ஆண்டுகள் வீட்டுக்குள் பூட்டி வைக்கப்பட்ட பெண்ணை போலீஸார் வெள்ளிக்கிழமை மீட்டனர். கணவன் மீது புகார் கொடுக்க மறுத்துவிட்ட அப்பெண் பெற்றோர் வீட்டில் தங்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

முப்பதுகளின் தொடக்க வயதில் இருக்கும் அப்பெண்ணின் பெயர் சுமா. இந்தத் துயரச் சம்பவம் குறித்து அவர் கூறுகையில், "எனக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. அன்றிலிருந்து எனது கணவர் என்னை வீட்டில் பூட்டி வைத்து சித்திரவைதை செய்தார். யாரும் அவரை கேள்வி கேட்வில்லை. எனக்கு இரண்டு குழந்தைகள், பள்ளிக்கு செல்கிறார்கள். அவர்கள் பள்ளியில் இருந்து வந்ததும் கணவர் வேலையிலிருந்து வீட்டிற்கு திரும்பும் வரை வெளியே நிற்க வேண்டும். நான் அவர்களுக்கு ஜன்னல் வழியாகதான் உணவு வழங்குவேன். கழிவறை வீட்டிற்கு வெளியே இருந்ததால், இயற்கையின் தேவைக்காக அறையில் உள்ள சிறிய பெட்டியைப் பயன்படுத்தினேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "அந்தப் பெண் முதலில் தனது பெற்றோர் வீட்டுச் சென்று வந்துள்ளார். அதற்கு பின்னர் அப்பெண் தடுக்கப்பட்டுள்ளார். அவரது கணவர் வேலைக்குச் செல்லும் முன்பு அந்தப் பெண்ணை வீட்டுக்குள் வைத்து பூட்டு விட்டு சென்றுள்ளார். அந்தக் கணவர் தன்னை பாதுகாப்பில்லாதவராக உணர்ந்துள்ளார். அவருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.

போலீஸாரால் மீட்கப்பட்ட பின்னர் அப்பெண்ணுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அப்பெண் கணவர் மீது புகாரளிக்க விரும்பவில்லை என்றும், தனது பெற்றோரின் வீட்டில் தங்கி திருமணப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். சுமா அவரது கணவருக்கு மூன்றாவது மனைவியாவார். மற்ற இரண்டு பேரை பிரிந்த பின்னர் சுமாவை அவர் மணந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE