தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பெங்களூருவில் தற்கொலை: பல்கலை., ஊழியர்களுக்கு எதிராக வலுக்கும் குரல்

By இரா.வினோத்


பெங்களூரு: தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பெங்களூருவில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் உள்ள பிஇஎஸ் பல்கலைக் கழகத்தில் விக்னேஷ் (19) இளங்கலை வணிக நிர்வாகத்தில் (பிபிஏ) முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன் தினம் பிற்பகலில் விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டார். சுயநினைவற்ற நிலையில் விடுதி ஊழியர்கள் அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாலை 5 மணிக்கு உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து எலக்ட்ரானிக் சிட்டி போலீஸார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்கொலை செய்துகொண்ட மாணவரின் வகுப்பறை மற்றும் விடுதி ஆகியவற்றின் சிசிடிவி காட்சிகளை சேகரித்தனர். மேலும் திண்டுக்கல்லில் வசிக்கும் அவரது பெற்றோரை பெங்களூருவுக்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது பெற்றோர் தரப்பில் விக்னேஷின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. உரிய முறையில் விசாரித்து குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனிடையே பிரேத பரிசோதனைக்கு பிறகு வியாழக்கிழமை விக்னேஷின் உடலை போலீஸார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

பிஇஎஸ் பல்கலைக்கழகத்தில் கடந்த 7 மாதத்தில் ஆதித்யா பிரபு, சூர்யா, விக்னேஷ் ஆகிய 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருப்பதால் அங்கு படிக்கும் மாணவர்களும் பெற்றோரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ஆதித்யா பிரபு மரணத்தில் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பதாகக்கூறி சமூக வலைதளங்களில் பரவலாக பதிவிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE