சென்னை: மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் கொலை வழக்கில் இளஞ்சிறார் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை, ஒக்கியம் துரைப்பாக்கம், கண்ணகிநகரில் வசித்து வந்தவர் டில்லிபாபு (30). சென்னை மாநகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளரான இவர் கடந்த 31-ம் தேதி திருவான்மியூர், அவ்வை நகர், எல்.பி சாலை சந்திப்பில் மூன்று சக்கர பேட்டரி வாகனத்தை ஓட்டிக்கொண்டு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த 4 பேர் கும்பல் டில்லிபாபுவை கொலை செய்து தப்பியது. இதுகுறித்து திருவான்மியூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். விசாரணையில் கண்ணகிநகர் அருண் (22), தனது நண்பர்களான அதேபகுதியைச் சேர்ந்த வினோத் (39), நவீன்ராஜ் (18), மற்றும் 17 வயது இளஞ்சிறார் ஆகியோரை அழைத்துச் சென்று கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையில் கடந்த 27-ம் தேதி கொலையான டில்லிபாபு, கைது செய்யப்பட்டுள்ள அருணை, தகராறில் கல்லால் தாக்கியுள்ளார். இந்த முன்விரோதத்தில் கொலை நடந்துள்ளது.