விவசாயி கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை @ ஓசூர்

By செய்திப்பிரிவு

ஓசூர்: ஓசூர் அருகே குப்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடேசப்பா(57). விவசாயி. பியாரகப்பள்ளியைச் சேர்ந்தவர் லட்சுமி நாராயணன்(31). நண்பர்களான இவர்கள் இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் தேவகானப் பள்ளியில் உள்ள தைலந்தோப்புக்கு மது அருந்தச் சென்றனர்.

அப்போது, அங்கு பாரந்தூரைச் சேர்ந்த பசவராஜ்(30), எஸ்.முதுகானப்பள்ளியைச் சேர்ந்த சந்தோஷ்குமார்(30) ஆகியோர் நின்றுகொண்டிருந்தனர். இவர்கள் இருவருடன் சேர்ந்து கொண்ட லட்சுமிநாராயணன், வெங்கடேசப்பாவிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பணம் கொடுக்க மறுத்த அவரை,லட்சுமி நாராயணன் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து கத்தியால் குத்திகொலை செய்தனர். பின்னர் அவரிடம் இருந்த ரூ.8,550-ஐ எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பினர்.

இதுதொடர்பாக தளி போலீஸார் வழக்குப்பதிவு செய்து லட்சுமி நாராயணன் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு ஓசூர் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட லட்சுமி நாராயணன் உள்ளிட்ட 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும் மற்றும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE