மூதாட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து 18 பவுன் நகை கொள்ளை @ சேத்தியாத்தோப்பு

By செய்திப்பிரிவு

கடலூர்: சேத்தியாத்தோப்பில் மூதாட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து 18 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு முருகன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சீத்தாராம் மனைவி கமலா (75). இவருக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனித்தனியே வசிக்கின்றனர். கமலா தனது மகள் சித்ராவுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சித்ரா தனது பேரனை பார்ப்பதற்காக கடந்த மாதம் சென்னைக்கு சென்றதால், கமலா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். நேற்று காலை வழக்கம் போல் எழுந்த கமலா, வீட்டு வேலைகளை செய்துவிட்டு காலை 7 மணிக்கு அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினார்.

அப்போது வீட்டுக்குள் பதுங்கி இருந்த மர்மநபர்கள், வீட்டில் இருந்த கமலாவின் புடவையில் மயக்க மருந்தை வைத்து அவரது முகத்தில் அழுத்தினர். இதில் அவர் மயங்கி விழுந்தார். பின்னர் சுமார் 11 மணியளவில் கமலா கண்விழித்து பார்த்தபோது, வீட்டில் இருந்த 18 பவுன் நகைகள், வெள்ளி நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற சேத்தியாத்தோப்பு இன்ஸ்பெக்டர் சேதுபதி தலைமையிலான போலீஸார் மூதாட்டியை மீட்டு சேத்தியாத்தோப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விழுப்புரம் தடவியல் டிஎஸ்பி ஸ்ரீதர் தலைமையில் தடயவியல் நிர்ணர்கள் வீட்டில் உள்ள கைரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். கடலூரில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் மர்ம நபர்கள் பயன்படுத்திய புடவையை மோப்பம் பிடித்தது. தொடந்து அங்கிருந்து முருகன் கோயில் தெரு வழியாக பெரியகுப்பம் கொடிக் கம்பம் வரை சென்று அங்கேயே நின்றது. பீரோவில் இருந்த நகை, பணம் எவ்வளவு என்பது குறித்து அவரது மகன், மருமகள் வந்த பின்பு தான் முழுமையாக தெரியும் என்று போலீஸார் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ரூபன்குமார் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE