செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில் கைதான 2 பேர் தப்ப முயன்றபோது கால்முறிந்தது @ திருப்பூர்

By செய்திப்பிரிவு

திருப்பூர்: பல்லடத்தில் செய்தியாளர் தாக்குதலில் கைதான இருவர் தப்பமுயன்றபோது, கால் முறிந்துமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம்அருகேயுள்ள காமநாயக்கன்பாளையம் கே.கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் நேசபிரபு(28). தனியார் தொலைக்காட்சி செய்தியாளரான இவரை, கடந்த 24-ம் தேதி இரவு மர்ம நபர்கள் துரத்திச் சென்று அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த நேசபிரபு, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். முன்விரோதம் காரணமாக நேசபிரபு தாக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி வ.உ.சி. வீதியை சேர்ந்த பிரவீன்குமார்(27), திருப்பூர் கே.வி.ஆர். நகர் பிள்ளையார் கோயில் வீதியைச் சேர்ந்த சரவணன் (23) ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர்.

இந்நிலையில், தாக்குதலுக்குப் பயன்படுத்திய அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வீசிய இடத்தை காண்பிப்பதற்காக இருவரையும் காமநாயக்கன்பாளையம் பகு திக்கு தனிப்படை போலீஸார் நேற்று அழைத்துச் சென்றனர். அப்போது இருவரும் தப்ப முயன்றுள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “அங்கிருந்த குழியில்இருவரும் குதித்தனர். இதில் கால்முறிவு ஏற்பட்டதால், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வழக்கில் தலைமறைவானவர்களைக் கைதுசெய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE