மாநாட்டுக்கு சென்று திரும்பியபோது விசிக பிரமுகர்கள் 3 பேர் சாலை விபத்தில் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

விருத்தாசலம்: கட்சி மாநாட்டுக்குச் சென்றுவிட்டு திரும்பிய போது நேரிட்ட சாலை விபத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர்கள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் பலத்த காயமடைந்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த வில்லியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 20 பேர், திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொள்ள நேற்று முன்தினம் வேனில் சென்றனர்.

மாநாடு முடிந்த பின்னர் புறப்பட்ட அவர்கள் நேற்று விருத்தாசலம்-சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சிதம்பரம் திரும்பிக் கொண்டிருந்தனர்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் உள்ள நாரையூர் கிராமம் அருகே சென்றபோது, திடீரென எதிரே வந்த சரக்கு லாரி மீது, வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில்சிதம்பரத்தைச் சேர்ந்த அன்புச்செல்வன் (28), உத்திரக்குமார் (29) ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்து போலீஸார் மற்றும் தீயணைப்பு துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு, வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். வழியில் யுவராஜ் (17) என்பவர் உயிரிழந்தார்.

மற்றவர்களில் 6 பேர்பலத்த காயமடைந்தனர். அவர்களில் 5 பேர் பெரம்பலூர் அரசுமருத்துவமனைக்கும், ஒருவர்விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கும் மேல்சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். மற்ற 11 பேரும் வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்த அன்புச்செல்வன், உத்திரக்குமார், யுவராஜ் ஆகியோரது உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. விபத்து குறித்து வேப்பூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE