சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பையும் மீறி நுழைந்த நபர்

By செய்திப்பிரிவு

சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் நேற்று நள்ளிரவு முதல் 26-ம் தேதி நள்ளிரவு வரை உச்சகட்ட பாதுகாப்பான 7 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப் படுகிறது.

இந்நிலையில், உச்சகட்ட பாதுகாப்பையும் மீறி சென்னை சர்வதேச விமான நிலையம் புறப்பாடு பகுதிக்குள் மர்ம ஒருவர் உள்ளே சென்று பல மணி நேரம் சுற்றி அலைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச விமான நிலையம் புறப்பாடு பகுதியில், நேற்று மாலை சுமார் 35 வயதுள்ள மர்ம நபர், பாதுகாப்பு சோதனை பகுதிக்குள் சுற்றிக் கொண்டு இருந்தார். அவர் நீண்ட நேரமாக பாதுகாப்பு சோதனைகள் நடக்கும் ஒவ்வொரு கவுண்டர்களாக சென்று கொண்டிருந்தார்.

இதை கட்டுப்பாட்டு அறை கண்காணிப்பு கேமராவில் அதிகாரிகள் பார்த்தனர். இதையடுத்து, மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் விரைந்து சென்று மர்ம நபரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் விமான டிக்கெட், போர்டிங் பாஸ், பிசிஏஎஸ் வழங்கும் சிறப்பு அனுமதி அட்டை எதுவும் இல்லை. அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பிடிபட்டவர் நீலகிரி மாவட்டம் உதக மண்டலத்தைச் சேர்ந்த ஞானசேகரன் ( 35 ) என தெரியவந்தது.

இவரது நண்பர்கள் 3 பேர் நேற்று ஏர் இந்தியா விமானத்தில் இலங்கைக்கு புறப்பட்டுச் சென்றனர். அவர்களை வழியனுப்ப ஞானசேகரன் வந்துள்ளார். ஞானசேகரன், நண்பர்களின் உடைமைகளுடன் கூடிய டிராலியை தள்ளியபடி, உள்ளே நுழைந்துள்ளார். இதை பாதுகாப்பு படையினர் கவனிக்காமல் இருந்தது தெரியவந்தது. எந்த வித ஆவணமும் இல்லாத ஞானசேகரனை, பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் எப்படி உள்ளே அனுமதித்தனர் என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE