கோவை மத்திய சிறையில் திருநங்கை தற்கொலை முயற்சி

By செய்திப்பிரிவு

கோவை: கோவை மத்திய சிறையில் தற்கொலைக்கு முயன்ற திருநங்கை மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர் வெண்பா. திருநங்கையான இவர், கடந்த 2020-ஆண்டு கோவை பீளமேட்டில் செளந்தர் என்பவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, கோவை மத்திய சிறை வளாகத்திலுள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார்.

ஜாமின் கிடைக்க தாமதமானதால் மனவேதனையில் இருந்த வெண்பா, நேற்று முன்தினம் மாலை மகளிர் சிறை வளாகத்தில் உள்ள கழிவறையில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். உடனிருந்த கைதிகளால் மீட்கப்பட்ட அவரை சிறைத்துறை அதிகாரிகள் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீஸார் மற்றும் சிறைத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE