பென்னாகரத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் பெண் கொலை - தனிப்படை போலீஸ் தீவிர விசாரணை

By செய்திப்பிரிவு

தருமபுரி: பென்னாகரத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் பெண் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் மனைவி சுமதி ( 45 ). இவர்களுக்கு 2 மகன்கள். இந்நிலையில், கருத்து வேறு பாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக குணசேகரனும், சுமதியும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சுமதி, அரசு மருத்துவமனையில் காசநோய் பிரிவில் கிராமப் புற உதவியாளராக ( தற்காலிகப் பணி ) பணியாற்றி வந்தார். சுமதியின் மகன்கள் இருவரும் படிப்பை முடித்து விட்டு ஓசூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று காலை நீண்ட நேரமாகியும் சுமதி வீட்டில் இருந்து வெளியில் வராததால் அருகில் வசிப்பவர்கள் சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் வீட்டில் உயிரிழந்து கிடப்பதை அறிந்து பென்னாகரம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். போலீஸார் நேரில் வந்து ஆய்வு செய்த போது, சுமதி கைகள் கட்டப்பட்ட நிலையில் பின் தலையிலும், உடலிலும் காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார்.

தகவல் அறிந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், பென்னாகரம் டிஎஸ்பி மகாலட்சுமி ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும், தடயவியல் நிபுணர் வரவழைக்கப் பட்டு கொலை நடந்த வீட்டில் ஆய்வு நடத்தப்பட்டது. அதேபோல, மோப்ப நாய் வரவழைக்கப் பட்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பின்னர், சுமதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 2 தனிப் படைகள் அமைக்கப் பட்டு போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE