சென்னை ஐஸ் அவுசில் ரவுடி ஆற்காடு சுரேஷின் கூட்டாளி கொலை: மர்ம கும்பலை பிடிக்க போலீஸார் தீவிரம்

By செய்திப்பிரிவு

சென்னை: பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் கூட்டாளி மாதவனை சென்னை ஐஸ் அவுசில், ஒரு கும்பம் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியது. போலீஸார் அவர்களை தேடி வருகின்றனர்.

சென்னை புளியந்தோப்பை சேர்ந்தவர் மாதவன் ( 52 ). இவர் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் கூட்டாளி ஆவார். இவர் மீது கொலை முயற்சி, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், மாதவன் ஐஸ் அவுஸ் டாக்டர் பெசன்ட் சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் நேற்று மாலை உணவருந்தி கொண்டிருந்தார்.

அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த கும்பல், மாதவனை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்க முயன்றது. சுதாரித்துக் கொண்ட மாதவன், அந்த கும்பலின் பிடியில் இருந்து தப்பி ஒடினார். ஆனாலும், அந்த கும்பல் அவரை விடாமல் துரத்தி வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியது. இதையடுத்து, தகவல் அறிந்து வந்த ஐஸ் அவுஸ் போலீஸார் மாதவன் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேரில் பார்த்த ஒரே சாட்சி: கடந்த ஆண்டு ஆக.18-ம் தேதிபிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் விசாரணைக்காக எழும்பூர் நீதிமன்றம் வந்தார். பின்னர், மாலையில் உணவருந்த பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிக்கு சென்றபோது, அவரை காரில் பின் தொடர்ந்த கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இந்த கொலை தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஆற்காடு சுரேஷை கொலை செய்யும் போது, அவரது கூட்டாளி மாதவனும் உடன் இருந்தார். இந்த சம்பவத்தில் மாதவனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இந்நிலையில், ஆற்காடு சுரேஷின் கொலையை நேரில் பார்த்த ஒரே சாட்சியாக மாதவன் மட்டும் இருப்பதால், ஆற்காடு சுரேஷை கொலை செய்த கும்பல், சதி திட்டம் தீட்டி,இவரையும் கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இந்த கொலை சம்பவம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE