பட்டுக்கோட்டை அருகே காதல் திருமணம் செய்த மகளை கொலை செய்து எரித்த பெற்றோர் கைது

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அருகே காதல் திருமணம் செய்த மகளை அடித்துக் கொன்று, சடலத்தை எரித்த பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த நெய்வவிடுதியைச் சேர்ந்த பெருமாள்- ரோஜா தம்பதி மகள் ஐஸ்வர்யா(19). அருகில் உள்ள பூவாளூரைச் சேர்ந்தவர் பா.நவீன்(19). பொறியியல் பட்டயப் படிப்பு படித்துள்ளார். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில், திருப்பூர் அருகேயுள்ள அவரப்பாளையத்தில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இருவரும், கடந்த டிச. 31-ம் தேதி அங்குள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்துகொண்டனர். பின்னர், பல்லடம் அருகே வீரபாண்டியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

இதையறிந்த ஐஸ்வர்யாவின் பெற்றோர், உறவினர்களுடன் அங்கு சென்று ஐஸ்வர்யாவை தேடியுள்ளனர். பின்னர், அவரைக் காணவில்லை என பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து ஐஸ்வர்யாவை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்த போலீஸார், அவரை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, கடந்த 3-ம் தேதி ஐஸ்வர்யா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி, அவசரம் அவசரமாக அவரது சடலத்தை பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீஸாருக்குத் தெரியாமல் எரித்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்தில் கடந்த 7-ம் தேதி நவீன் புகார் அளித்தார். புகார் தொடர்பாக ஐஸ்வர்யாவின் பெற்றோர், உறவினர்களிடம் தஞ்சாவூர் எஸ்.பி. ஆஷிஷ்ராவத் தலைமையிலான போலீஸார் கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தினர்.

இதில், தங்களது மகள் மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்ததால், அவரை பெற்றோரே அடித்துக் கொலை செய்து, சடலத்தை எரித்தது தெரியவந்தது. இதையடுத்து, ஐஸ்வர்யாவின் பெற்றோர் பெருமாள்(50), ரோஜா(45) ஆகியோரை போலீஸார் நேற்று கைது செய்தனர். பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும், பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE