சென்னை | ரூ.13 லட்சத்துடன் மாயமான ஊழியரை கடத்தி தாக்கியவர்களில் ஒருவர் கைது: மேலும் இருவருக்கு போலீஸ் வலை

By செய்திப்பிரிவு

சென்னை: பணப் பரிமாற்ற நிறுவன உரிமையாளர் கொடுத்தனுப்பிய ரூ.13 லட்சம் பணத்துடன் மாயமான ஊழியரைக் கடத்தி தாக்கிய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவான மேலும் இருவரை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில்கூறப்படுவதாவது: சென்னை,தண்டையார் பேட்டை, வைத்தியநாதன் தெருவில் வசிப்பவர் அப்துல்ரகுமான்(32).

இவர் மண்ணடியைச் சேர்ந்த அயூப் என்பவரின் பணப்பரிமாற்றம் (மணி எக்ஸ்சேஞ்ச்) நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், அயூப் பணப்பரிமாற்றம் செய்ய கொடுத்த ரூ.13 லட்சத்துடன் அப்துல் ரகுமான்மாயமானார். அதிர்ச்சி அடைந்த அயூப் பல இடங்களில் தேடியும் அப்துல் ரகுமானைக் கண்டுபிடிக்க முடியவில்லையாம்.

இந்நிலையில், கடந்த 6-ம் தேதிஅயூப் தனது நண்பர்களான திருச்சியைச் சேர்ந்த சையது அபுதாகீர்(39) மற்றும் வீரா ஆகிய இருவருடன் சேர்ந்து அப்துல் ரகுமான் மற்றும் அவரது மைத்துனர் ஷேக்பீர்ஹம்ஷா ஆகிய இருவரையும் கண்டுபிடித்து காரில் கடத்தியுள்ளனர். பின்னர், தி.நகர் பகுதியில்உள்ள விடுதியில் அடைத்துவைத்து,கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டு அவர்களைத் தாக்கினர்.

இதையறிந்த அப்துல் ரகுமானின் தந்தை, தனது மகன் கடத்தப்பட்டது குறித்து பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

முதல் கட்டமாக கடத்தப்பட்ட அப்துல் ரகுமான், அவரது உறவினரை மீட்டனர். தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்டதாக சையது அபுதாகீரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான அயூப், வீரா ஆகிய இருவரும் போலீஸார் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE