ஐஎஸ் அமைப்புக்கு எதிராக 4 மாநிலங்களில் என்ஐஏ சோதனை: கர்நாடகாவில் 8 பேர் கைது

By இரா.வினோத்


பெங்களூரு: ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருக்கும் சில தீவிரவாத அமைப்பினர் நாட்டில் சதிசெயல்களில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுத் துறைக்கு அண்மையில் தகவல் கிடைத்தது. அதன்பேரில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கடந்த அக்டோபரில் டெல்லியில் சோதனை நடத்தினர்.

அதில் கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த வாரத்தில் மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய‌ மாநிலங்களில் 44 இடங்களில் சோதனை நடத்தினர். கடந்த 4 நாட்களுக்கு முன்னர் பெங்களூருவில் 6 இடங்களில் சோதனை நடத்தினர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மாநிலங்களில் சோதனை நடத்தினர். கர்நாடகமாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான‌ 19 இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படும் சல்பர், பொட்டாசியம் நைட்ரேட் உள்ளிட்ட வெடிமருந்துகளும், துப்பாக்கி தோட்டாக்களும் சிக்கின. தவிர கூர்மையான ஆயுதங்கள், ரூ.3 லட்சம் ரொக்கம், 4 மடி கணிணிகள், 17 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

பெல்லாரியில் ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட முகமது சுலைமான் (35), மினாஸ் (27) உள்ளிட்ட 8 பேரை கைது செய்துள்ளனர். இவர்களை சிறப்பு நீதிமன்றத்தில் அஜர்ப்படுத்தி விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE