சென்னையில் ஒரே வாரத்தில் 19 பேருக்கு குண்டர் சட்டத்தில் சிறை

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, கடத்தல் உள்பட அனைத்து வகையான குற்றச் செயல்களையும் முற்றிலும் கட்டுப்படுத்த காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒருபகுதியாக தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில் இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் கடந்த 13-ம் தேதி வரையிலான காலத்தில் சென்னை பெருநகரில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்டதாக 449 பேர், திருட்டு, செயின் பறிப்பு, வழிப்பறி மற்றும் பண மோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக 110 பேர், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த வழக்கில் சிக்கிய 81 பேர், சைபர் குற்றத்தில் ஈடுபட்டதாக 4 பேர் உள்பட 667 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2 பெண்கள் உட்பட 19 பேர் இப்பிரிவில் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கூறும்போது, ‘‘சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். குற்றச் செயல்களில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது பாரபட்சம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE