இளம்பெண் தற்கொலை விவகாரம்: கந்துவட்டி கும்பல் மிரட்டல் காரணமா? @ விருத்தாசலம்

By செய்திப்பிரிவு

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே இளம் பெண் ஒருவர் நேற்று முன்தினம் தூக்கிட்டுத் தற்கொலை செய்தார். கந்துவட்டி கும்பல் மிரட்டியதால் அப்பெண் தற்கொலை செய்ததாக புகார் எழுந்துள்ளது. கடலூர் மாவட்டம் விருத் தாசலம் ஆலடி சாலை காமராஜர் நகரை சேர்ந்தவர்கள் தினேஷ் குமார் (29)-செல்வி தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளான நிலையில், ஒரு பெண் குழந்தை உள்ளது. தினேஷ்குமார் சிசிடிவி கேமரா விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். தினேஷ் குமார் விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த கந்துவட்டி கும்பலிடம் , வட்டிக்கு கடன் வாங்குவது வழக்கமாம்.

ஏற்கெனவே கடன் வாங்கி அதனை வட்டியுடன் செலுத்தி வந்துள்ளார். தற்போது தினேஷ் குமார், மேலும் ரூ. 1.5 லட்சம் கடனாக பெற்றிருந்ததாகவும், அதற்கு வாரம் ரூ. 6 ஆயிரம் திரும்பச் செலுத்த வேண்டும் என கந்துவட்டி கும்பல் கூறியதாக தெரிகிறது. ஆனால் தினேஷ்குமார் குறித்த காலத்தில் பணம் செலுத்த தவறியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கந்துவட்டி கும்பல், 5 பேர் கொண்ட கும்பல் மூலம் தினேஷ்குமாரை கடத்தி ஒரு லாட்ஜில் அடைத்து, பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பின்னர் தினேஷ்குமாரின் மனைவிக்கும் போன் செய்ய சொல்லி அவரையும் தரக்குறைவாக பேசியதாகத் தெரிகிறது.

பின்னர் தினேஷ் குமாரை விடுவித்துள்ளனர். இந்த நிலையில் தான் செல்வி தனது வீட்டில் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக விருத்தாசலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தினேஷ்குமாரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, கந்து வட்டி கும்பல் திட்டியதால் வேதனை அடைந்து செல்வி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவர் கூறியுள்ளராம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE