அரூர்: கோவையில் கடந்த மாதம் 28-ம் தேதி நடந்த நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் 575 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப் பட்டன. விசாரணையில், நகை திருட்டில் ஈடுபட்டது தருமபுரி மாவட்டம் தேவரெட்டியூரைச் சேர்ந்த முனிரத்தினம் (50) மகன் விஜய் என்பதும், திருடிய நகைகளை தருமபுரி அருகேயுள்ள தும்பலஅள்ளியில் உள்ள தனது மாமியார் வீட்டில் பதுக்கி வைத்ததும் தெரிய வந்தது . இதையடுத்து கோவை போலீஸார் அங்கிருந்த நகைகளை பறிமுதல் செய்து, தலைமறைவாக உள்ள விஜய்யை தேடி வந்தனர்.
இந்நிலையில் விஜய்யின் தந்தை முனிரத்தினத்திடம் போலீஸார் தீவிரமாக விசாரித்து வந்தனர். நேற்று முன்தினம் நடந்த விசாரணையின் போது முனிரத்தினம் தனது வீட்டின் கழிவறையில் இருந்ததாக 38 கிராம் நகைகள் மற்றும் 2 செல்போன்களை ஒப்படைத்துள்ளார். மகனின் செயலால் மன உளைச்சலில் இருந்த முனிரத்தினம் நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த கம்பை நல்லூர் போலீஸார் பிரேதத்தை கைப்பற்றி தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.