ராஜஸ்தான் | கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் ஜெய்ப்பூரில் சுட்டுக்கொலை

By செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் செயல்படும் ராஷ்டிரிய ரஜபுத்திர கர்னி சேனா பிரிவின் தலைவர் சுக்தேவ் சிங் கோகமெடி ஜெய்ப்பூரில் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டு உள்ளார்.

இதுகுறித்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிஜு ஜார்ஜ் ஜோசப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஜெய்ப்பூரின் ஷியாம் நகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் சுக்தேவ் சிங் நேற்று இருந்துள்ளார். அப்போது அப்பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர், சுக்தேவ் சிங்கின் வீட்டில் புகுந்து, அவரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார்.

இதில் சுக்தேவ் சிங், அவரது பாதுகாவலர் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதும் அந்த மர்ம நபர் தப்பியோடிவிட்டார்.

இதையடுத்து காயமடைந்த 3 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் ராஷ்டிரிய ரஜபுத்திர கர்னி சேனா அமைப்பின் தலைவர் சுக்தேவ் சிங் மட்டும் உயிரிழந்துவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து ராஜஸ்தான் போலீஸ் டிஜிபி உமேஷ் மிஸ்ரா கூறும்போது, “பகல் நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 2 பேரும் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டனர். கொலை செய்த நபரைத் தேடுவதற்கு போலீஸ் தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE