இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

By செய்திப்பிரிவு

ராமேசுவரம்: இலங்கையில் இருந்து தமிழகத் துக்கு கடத்தி வரப்பட்ட, ரூ.5 கோடி மதிப்பிலான 8 கிலோ தங்கத்தை சுங்கத் துறை நுண்ணறிவுப் பிரிவினர் பறிமுதல் செய்தனர்.

இலங்கையிலிருந்து, ராமேசுவரம் கடல் பகுதிக்கு படகு மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக, திருச்சி சுங்கத் துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ராமேசுவரம் பாம்பன் முந்தல்முனை கடற்கரைப்பகுதியில் நேற்று அதிகாலை சுங்கத் துறை நுண்ணறிவுப் பிரிவினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பதிவு எண்இல்லாமல் கரைக்கு வந்த நாட்டுப் படகைச் சுற்றி வளைத்தபோது, படகில் இருந்தவர்கள் கடலில் குதித்துதப்பிவிட்டனர். தொடர்ந்து, அதிகாரிகள் படகைச் சோதனையிட்டபோது, 3 கிலோ 500 கிராம் தங்கக்கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டி ருந்தது தெரியவந்தது.

இதேபோல, பாம்பனிலிருந்து சில கடல் மைல் தொலைவில், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஒரு மிதவையில் சுமார் 4 கிலோ 500 கிராம் தங்கம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.5 கோடியாகும்.

தொடர்ந்து, தங்கம் கடத்தி வரப்பட்ட படகையும் பறிமுதல் செய்து, கடத்தலில் தொடர்புடைய நபர்கள் குறித்து சுங்கத் துறை நுண்ணறிவுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE