சென்னையில் உரிய ஆவணங்களின்றி ஆட்டோவில் எடுத்துவரப்பட்ட ரூ.1.25 கோடி பறிமுதல்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ஆட்டோவில் ரூ.1.25 கோடி பணம் எடுத்து வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் பணத்துடன் அந்த நபரை வருமான வரித் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதுதொடர்பாக காவல்துறை கூறியிருப்பதாவது: சென்னை வண்ணாரப்பேட்டை காவல் நிலைய காவல் துறையினர் நேற்று (நவ.28) மாலை, வண்ணாரப்பேட்டை, மின்ட் மேம்பாலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு ஆட்டோவில் சந்தேகத்துக்கிடமாக வந்த நபரை நிறுத்தி விசாரணை செய்தனர். விசாரணையில் ஆட்டோவில் வந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். மேலும் அவர் கொண்டு வந்த பையை சோதனை செய்தபோது, அதில் பெருமளவு பணம் இருந்தது தெரியவந்தது.

வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் துறையினர் மேற்படி நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில், பிடிபட்ட நபர் கர்நாடகா மாநிலம் பெல்லாரியைச் சேர்ந்த தைர்யசீல் (25) என்பதும், உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் ரூ.1,25,50,000 வைத்திருந்ததும் தெரியவந்தது. மேலும் விசாரணையில் மேற்படி நபர் விஜயவாடாவில் இருந்து தங்கம் வாங்குவதற்காக பணம் எடுத்து வந்ததும் தெரியவந்தது.

விசாரணைக்குப் பின்னர் காவல் துறையினர், பிடிபட்ட நபரையும், கைப்பற்றப்பட்ட ரூ.1,25,50,000 பணத்தையும், சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள வருமான வரித் துறை. புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடம் மேல் நடவடிக்கைகாக ஒப்படைத்தனர், என்று கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE