டெல்லியில் இளம்பெண் கழுத்து நெரித்து கொலை: காதலன் மும்பையில் கைது

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி விஸ்வாஸ் நகர் பகுதியில் அலுவலகம் அமைத்து இ-காமர்ஸ் வர்த்தகம் நடத்தி வந்தவர் சுல்தான் (19). இவர் தன்னைவிட 4 வயது மூத்த ஷாமா (23) என்பவரை கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தார். ஃபர்ஸ் பஜாரில் அழகு நிலையத்தில் வேலைபார்த்து வந்த ஷாமாவுக்கு ஏற்கெனவே காதலர் இருந்த நிலையில், அவரை விட்டுப் பிரிந்து சுல்தானுடன் பழகி வந்துள்ளார்.

இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருவீட்டாரும் பேசி வந்த நிலையில், ஷாமா முன்னாள் காதலனுடன் தொடர்பில் இருப்பது சுல்தானுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர், கடந்த சனிக்கிழமை மாலை ஷாமாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது கோபமடைந்த சுல்தான் ஷாமாவை கழுத்தை நெரித்து கொலை செய்து அவரது உடலை பிளாஸ்டிக் பையில் போட்டு அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது. விஷ்வாஸ் நகரில் உள்ள சுல்தானின் அலுவலக கட்டிடத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் பை ஒன்று கிடப்பதாக ஞாயிற்றுக்கிழமை மாலை கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற போலீஸார் ஷாமாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், ஷாமாவை கொலை செய்துவிட்டு மும்பைக்கு தப்பியோடி உறவினர்கள் வீட்டில் பதுங்கியிருந்த சுல்தானை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE