பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரு மாநகர காவல் ஆணையர் பி.தயானந்தா நேற்று செய்தியாளர் களிடம் கூறியதாவது:
மைசூரு, உதயகிரியை சேர்ந்த மருத்துவர் சந்தன் பல்லால் (49) அவரது மனைவி மருத்துவர் மீனா (45) ஆகியோர் மருத்துவமனை மற்றும் பரிசோதனை நிலையம் நடத்தி வருகின்றனர். இருவரும்சட்ட விரோதமாக வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறிந்து சொல்வதாகவும் பெண்ணாக இருப்பின் கருக்கலைப்பு செய்ய ரூ.30 ஆயிரம் வசூலிப்பதாகவும் தெரியவந்தது.
இதையடுத்து மைசூரு மற்றும் மண்டியாவில் சந்தன் பல்லால் நடத்திவந்த 2 மருத்துவமனைகள் மற்றும் பரிசோதனை நிலையத்தில் போலீஸார் சோதனை நடத்தினர். அங்கு சட்டவிரோத கருக்கலைப்பு செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கின. இதையடுத்து மருத்துவர்கள் சந்தன் பல்லால், மீனா, செவிலியர்கள் 3 பேர், பரிசோதனை நிலைய தொழில்நுட்ப ஊழியர்கள் 2 பேர், உதவியாளர்கள் 2 பேர் எனமொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் மருத்துவர் சந்தன் பல்லால் கடந்த 3 ஆண்டுகளில் சட்ட விரோதமாக 900 கருக்கலைப்புகள் செய்ததாக தெரியவந்துள்ளது. கடந்த 3 மாதங்களில் மட்டும் 242 பெண்களுக்கு அவர் கருக்கலைப்பு செய்ததாக வாக்குமூலம் அளித் துள்ளார். இவ்வாறு தயானந்தா தெரிவித்தார்.