கிருஷ்ணகிரி அருகே லாரி மீது கார் மோதியதில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே லாரி மீது கார் மோதியதில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

திருப்பூரைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (22), நரேன் யஸ்வந்த் (19), சேலம் மாவட்டம் தாரமங்கலம் தமிழன்பன் (22), கருமலைக்கூடல் சஸ்வின் (23), திருச்சி சர்வின் ஐசக் (22) ஆகியோர், பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்றனர்.

இவர்கள் 5 பேரும் நேற்று காலை பெங்களூருவிலிருந்து கார் மூலம் ஓசூர் வழியாக கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்தனர். சூளகிரி கோனேரிப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் காலை 5 மணியளவில், முன்னால் சென்ற சரக்கு லாரி மீது எதிர்பாராதவிதமாக கார் மோதியது.

இதில் சந்தோஷ்குமார், நரேன்யஸ்வந்த், தமிழன்பன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிர்இழந்தனர். சஸ்வின், சர்வின் ஐசக்ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

அப்பகுதியில் இருந்தவர்கள் காயமடைந்த இருவரையும் மீட்டு,கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த சூளகிரி போலீஸார், உயிரிழந்த 3 பேரின் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரித்துவருகின்றனர். உயிரிழந்த சந்தோஷ்குமார், நரேன் யஸ்வந்த் ஆகியோர் பிசிஏவும், தமிழன்பன் எல்எல்பியும் படித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE