தனியார் கடன் வழங்கும் நிறுவனத்தில் வாடிக்கையாளர் தகவல்களை திருடி விற்ற பெண் ஊழியர் கைது @ சென்னை

By செய்திப்பிரிவு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கொரட்டூரைச் சேர்ந்த பிரவலிக்கா என்பவர் மெர்க்பிலேம்ஸ் டெக்னாலஜிஸ் என்ற தனியார் நிறுவனத்தை, கொரட்டூர் பெரியார் நகரில் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், கொரட்டூரில் டெலிகாலிங் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரத்தை பார்த்து பிரவலிக்கா நிறுவனத்தில் கொரட்டூரைச் சேர்ந்த குண சுந்தரி என்பவர் டெலிகாலிங் வேலையில் சேர்ந்துள்ளார். குண சுந்தரி அந்நிறுவனத்தில் பழைய மற்றும் புதிய வாடிக்கையாளர்களின் தகவல்களை பராமரித்தலும், வாடிக்கையாளர்களுக்கு வங்கி மூலம் கடன் ஏற்பாடு செய்து தரும் வேலை செய்து வந்துள்ளார்.

அப்போது கோடம்பாக்கத்தில் தனியார் கடன் வழங்கும் நிறுவனத்திடம் பிரவலிக்கா நிறுவனத்தின் வாடிக்கையாளர் தகவல்கள் மற்றும் ஆவணங்களை கொடுத்து கடன் தொகைக்கு ஏற்றவாறு பல லட்சங்களில் கமிஷன் தொகையை குண சுந்தரி பெற்றுள்ளார். இதனை அறிந்த மெர்க்பிலேம்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பிரவலிக்கா ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில், ஆவடி இணைய வழி குற்றப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். இந்நிலையில், கொரட்டூரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்த குண சுந்தரியை போலீஸார் கைது செய்து பூந்தமல்லி முதலாம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE