சென்னை | முன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: இளைஞர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் கைது செய்தனர். சென்னை எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையர் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர், சென்னை கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், சற்று நேரத்தில் அது வெடிக்க இருப்பதாகவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதையடுத்து, கருணாநிதி வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீஸார், வெடிகுண்டு இருப்பதாக வந்த அழைப்பு பொய்யானது என கண்டறிந்தனர்.

பின்னர், கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட செல்போன் எண்ணை வைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள மூங்கில்பட்டி பகுதியை சேர்ந்த செல்வம் என்பது தெரியவந்தது. இதையடுத்து, நத்தம் போலீஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில், செல்வம் எலக்ட்ரீசியன் வேலை செய்துவருவதும், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE