திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் 2 பயணிகள் கடத்தி வந்த ரூ.1.15 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துபாயில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று முன்தினம் வந்தது.
பேஸ்ட் வடிவில் கடத்தல்: அந்த வி்மானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத் துறை வான் நுண்ணறிவு பிரிவினர் சோதனை செய்தனர். அப்போது, பயணி ஒருவர் பேஸ்ட் வடிவில் ரூ.67.42 லட்சம் மதிப்பிலான 995 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்திருப்பதை கண்டறிந்து அதை பறிமுதல் செய்தனர். இதேபோல, சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் நேற்று முன்தினம் வந்த பயணிகளை, சுங்கத் துறை வான் நுண்ணறிவு பிரிவினர் சோதனை நடத்தினர். பயணி ஒருவர் உடையில் மறைத்து ரூ.47.75 லட்சம் மதிப்பிலான 700 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்க கடத்தலில் ஈடுபட்ட இருவரிடமும் சுங்கத் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.