ஜவ்வாதுமலையில் மான் வேட்டையில் விபரீதம் - துப்பாக்கி ரவை பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: ஜவ்வாதுமலையில் மான் வேட்டையில் ஈடுபட்ட இளைஞர் துப்பாக்கி ரவை பாய்ந்து உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ள ஜமுனாமரத்தூர் அருகே ஈச்சங்காடு வனப்பகுதியில் 4 பேர் கொண்ட கும்பல் நேற்று முன்தினம் நள்ளிரவு மான் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மான்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில், வேட்டை கும்பலைச் சேர்ந்ததென்மலை அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் வசித்த சக்திவேல் (28) என்பவர் மீது ரவை பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், பிரகாஷ் என்பவர் காயத்துடன், அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுள்ளார்.

இதுகுறித்து வனம் மற்றும் காவல்துறையினருக்கு தகவல்தெரிவிக்காமல், சக்திவேல் உடலை அடக்கம் செய்யும் முயற்சியில், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர். இதையறிந்த புதுப்பாளையம் மற்றும் ஜமுனாமரத்தூர் காவல்துறையினர் அத்திப்பட்டு கிராமத்துக்கு சென்று சக்திவேல் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புதுப்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து படுகாயம் அடைந்த பிரகாஷ் என்பவரை பிடித்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE