நியோ மேக்ஸ் வழக்கில் சரணடைந்தவர் வீட்டில் ரூ.5.80 லட்சம் ரொக்கம், நகைகள் பறிமுதல்

By என். சன்னாசி

தேனி: ‘நியோ- மேக்ஸ்’ வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த கம்பம் பகுதி இயக்குநர் வீட்டில் ரூ.5.80 லட்சம் ரொக்கம், தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தேனி மாவட்டம், கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் செல்வகுமார். இவர் ‘நியோ மேக்ஸ்’ மோசடி வழக்கு தொடர்பாக உசிலம்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் I-ல் கடந்த 2ஆம் தேதி சரணடைந்தார். இவ்வழக்கில் 45-ஆவது நபராக சேர்க்கப்பட்டுள்ள இவர், மில்லியானா டெவலப் பர்ஸ் பிரைவேட் லிமிடெட்-டின் நிறுவன இயக்குநராக உள்ளார். இவர் நியோ- மேக்ஸ் பிரை வேட் பிராப்பர்ட்டி லிமிடெட்டின் மிக முக்கிய நபராக செயல்பட்டு மக்களிடம் அதிக அளவில் முதலீட்டுகளை பெற்றுள்ளார்.

சூர்பா டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர்ஸ், சூர்யா பேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களை கம்பத்தில் நடத்தினார். மோசடி வழக்கு குறித்து கூடுதல் தகவல்களை பெறும் நோக்கில், அவரை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த 8-ம் தேதி போலீஸ் காவலில் எடுத்தனர். டிஎஸ்பி மணிஷா தலைமையில் அவரிடம் விசாரணை நடத்தி, வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது. தொடர்ந்து கடந்த 9-ம் தேதி அவரது வீட்டில் நடத்திய சோதனை மூலம் ரூ.5.80 லட்சம் ரொக்க பணம், 46.200 கிராம் தங்கம், 139.800 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ஒரு இன்னோவா கார் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அவர் மீண்டும் மதுரை டான்பிட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE