மும்பை | வேகமாக வந்த கார் அடுத்தடுத்த வாகனங்களில் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு, 6 பேர் காயம்

By செய்திப்பிரிவு

மும்பை: மும்பை அருகே சுங்கச்சாவடியில் நின்றிருந்த வாகனங்களின் மீது வேகமாக வந்த கார் ஒன்று மோதி நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்துள்ளனர். மும்பை பாந்தரா வோர்லி கடற்கரை இணைப்புச் சாலை சுங்கச்சாவடியில் வியாழக்கிழமை இரவு இந்த விபத்து நடந்தாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "பாந்தரா நோக்கி வந்துகொண்டிருந்த இன்னோவா கார் ஒன்று, இரவு 10.15 மணியளவில் சுங்கச்சாவடிக்கு 100 மீட்டர் அருகே முதலில் மெர்சிடிஸ் கார் மீது மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தப்பிச்செல்லும் முயற்சியில் வேகமாக வந்த இன்னோவா கார் சுங்கச்சாவடியில் நின்றிருந்த பல வாகனங்களின் மீது அடுத்தடுத்து மோதியுள்ளது. இந்த விபத்தில் இரண்டு பெண்கள், ஒரு ஆண் என மூன்று பேர் உயிரிழந்தனர்.

விபத்து குறித்து டிசிபி கிருஷ்ணகாந்த உபாத்யாய் கூறுகையில், "விபத்தினை எற்படுத்திய வேகமாக சென்ற இன்னோவா கார் சுங்கச்சாவடியில் நின்றிருந்த மற்ற வாகனங்களின் மீது மோதி மீண்டும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆறு வாகனங்கள் சேதமடைந்துள்ளன. மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது" என்றார்.

இந்த விபத்தில் சிறுகாயமடைந்த இன்னோவா கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE