எஸ்ஐ-க்கு அரிவாள் வெட்டு: மதுரையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை சுட்டுப் பிடித்த போலீஸ்

By என். சன்னாசி

மதுரை: மதுரையில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இது குறித்து போலீஸ் தரப்பு கூறியது: மதுரை தபால் தந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் லதா. இவர், கடந்த 4-ம் தேதி இரவு 8 மணிக்கு கூடல் புதூர் பகுதியிலுள்ள வைகைநதி தெருவில் டூவீலரில் சென்றார். அப்போது, அவரை மற்றொரு டூவீலரில் பின்தொடர்ந்த இளைஞர் ஒருவர் அவர் அணிந்து இருந்த 3 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பினார். இச்சம்பவத்தில் கீழே விழுந்த லதா காயமடைந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வலைதளங்களில் வேகமாக பரவியது. இது தொடர்பாக கூடல்புதூர் போலீஸார் விசாரணை செய்தனர்.

இந்நிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபரை பிடிக்க, காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் அவரைத் தேடினர். போலீஸாரால் தேடப்பட்ட மதுரை காளவாசல் பகுதியிலுள்ள சம்பட்டிபுரத்தை சேர்ந்த ஸ்டீபன் ராஜ்(24) என்பவர் செல்லூர் களத்து பொட்டல் பகுதியில் சென்றபோது, செல்லூர் காவல் நிலைய எஸ்ஐ ரஞ்சித் என்பவர் அவரை பிடிக்க முயன்றார். அப்போது, அவரது கையில் வைத்திருந்த அரிவாளால் எஸ்ஐயின் கை, முதுகுப்பகுதியில் வெட்டிவிட்டு தப்பிக்க முயன்றார். அப்போது, அருகில் இருந்த ஆய்வாளர் ஆறுமுகம், ஸ்டீபன் ராஜ் மீது 2 முறை துப்பாக்கியால் சுட்டத்தில் முழங்கால் பகுதியில் காயமடைந்து கீழே விழுந்தார். போலீஸார் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஸ்டீபன் ராஜா தாக்கியத்தில் காயமடைந்த எஸ்ஐ ரஞ்சித்தும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஸ்டீபன் ராஜா மீது ஏற்கனவே வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. லதாவிடம் செயின் பறித்த வழக்கில் அவரை தொடர்ந்து தேடிய நிலையில், அவர் சுட்டுப் பிடிக்கப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது, காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்ஐ ரஞ்சித்தை காவல் ஆணையர் லோகநாதன், துணை ஆணையர் சிநேகப்பிரியா ஆகியோர் நேரில் பார்த்து நலம் விசாரித்தனர்.

பின்னர் பேசிய காவல் ஆணையர் லோகநாதன் கூறியது: “கடந்த 4ம் தேதி லதா என்ற பெண்ணிடம் செயினை பறித்த வழக்கில் தேடப்பட்ட வந்தவர் ஸ்டீபன் ராஜ். இவர் மீது பல்வேறு வழிப்பறி சம்பவங்களும் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், மற்றொரு வழிப்பறி சம்பவ வழக்கில் கைது செய்யப்பட்ட நாகராஜன் என்பவர் அளித்த தகவலின் அடிப்படையில், ஸ்டீபன் ராஜை காவல்துறை கைது செய்ய முயன்றனர். அவர் எஸ்ஐ ஒருவரை அரிவாளால் வெட்டி தாக்க முயன்றால் அங்கு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் எச்சரிக்கை விடுத்தும் மீண்டும் தாக்க முயன்றதால் தற்காப்பிற்காக அவரது முழங்காலில் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடித்துள்ளனர். ஸ்டீபன் ராஜ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 4ம் தேதி மழைபெய்த சமயத்திலும், பெண்ணை பின்தொடர்ந்து செயினை பறித்த சம்பவத்தில் கைது செய்துள்ளோம். எஸ்ஐ ரஞ்சித், ஸ்டீபன் ராஜ் இருவரும் நலமாக உள்ளனர்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE