சென்னை | பொது மக்களை மிரட்டி தீபாவளி பண வசூல் போலி எஸ்.ஐ கைது

By செய்திப்பிரிவு

சென்னை: சீருடையில் சென்று பொது மக்களை மிரட்டி தீபாவளி பண வசூலில் ஈடுபட்ட போலி காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தீபாவளியை முன்னிட்டு வடபழனி போலீஸார் அதே பகுதி திருநகர் 1-வது தெரு மற்றும் 100 அடிசாலை சந்திப்பு அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்கு போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் (புல்லட்) அருகில் காவல் உதவி ஆய்வாளர் சீருடையில் ஒருவர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். சந்தேகம் அடைந்த வடபழனி போலீஸார் அவரிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

அவரது அடையாள அட்டையை பார்த்தபோது, அது போலியானது எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தபோது பிடிபட்ட நபர் ராயபுரம், வெங்கடேஸ்வரா நகர், 9-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த அஷ்வின் என்ற அஷ்வின்ராஜ் (30) என்பதும், அவர் காவல் உதவி ஆய்வாளர் சீருடையில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட புல்லட் வாகனத்தில் வடபழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கண்காணிப்பு என்ற பெயரில் பொதுமக்களை மிரட்டி கட்டாய தீபாவளி பண வசூலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 1 புல்லட் இருசக்கர வாகனம், ரூ.6 ஆயிரம், 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE