சென்னை | விமானத்தில் மறைத்து வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

By செய்திப்பிரிவு

சென்னை: வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு வந்தது. பயணிகள் அனைவரும் கீழே இறங்கி சென்ற பிறகு, அந்த விமானம் உள்நாட்டு விமானமாக கேரள மாநிலம் கொச்சி செல்ல இருந்தது, அதனால், விமானத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

அப்போது விமானத்தின் கழிவறை தண்ணீர் தொட்டிக்குள் ஒரு பார்சல் இருந்ததை பார்த்த ஊழியர்கள், உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மெட்டல் டிடெக்டர் மூலம், வெடிகுண்டு ஏதாவது இருக்கிறதா என்று சோதனை செய்தனர். வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதை உறுதி செய்தபிறகு பார்சலை பிரித்துப் பார்த்தனர்.

அதில், ரூ.1 கோடி மதிப்புள்ள 1.6 கிலோ தங்கக் கட்டிகள் இருந்தன. இதையடுத்து, தங்கக் கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தங்கத்தை கடத்தி வந்தது யார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE