உதகை | முதல்வர் வீடு உட்பட 7 இடங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்தவர் கைது

By செய்திப்பிரிவு

உதகை: சென்னையில் முதல்வர் ஸ்டாலின் வீடு உட்பட 7 வெவ்வேறு இடங்களில் வெடிகுண்டு வைத்துள்ள தாக மிரட்டல் விடுத்த உதகைதொழிலாளி கைது செய்யப்பட்டார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்தின் தொலைபேசி எண்ணுக்கு வந்த அழைப்பில் பேசியவர், ‘தமிழக முதல்வர் வீடு உட்பட 7 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது’ எனக் கூறிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டார்.

அதிர்ச்சியடைந்த சேவை மையஊழியர், உதகை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். சென்னைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, வெடிகுண்டு வைக்கப்பட்டதாக கூறப்பட்ட இடங்களில், போலீஸார் சோதனை நடத்தினர். ஆனால், குண்டு எதுவும் வைக்கப்படவில்லை என்பதும், தவறான தகவல் என்பதும் உறுதியானது.

இதையடுத்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில் போனில் பேசியவர், உதகை அருகே தாம்பட்டியை சேர்ந்த தொழிலாளி கணேசன் என்பது தெரியவந்தது. நேற்று காலை வீட்டில் இருந்த கணேசனை போலீஸார் கைது செய்தனர். மதுபோதையில் இருந்ததால்108 அவசர சேவை மையத்துக்கு அழைத்து மிரட்டல் விடுத்ததாக தெரிவித்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE