கர்நாடகாவில் அரசு அதிகாரி கத்தியால் குத்திக் கொலை

By செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடக அரசின் சுரங்கம் மற்றும் புவியியல் துறையில் துணை இயக்குநராக பொறுப்பு வகித்து வந்தார் பிரதிமா. நேற்று முன்தினம் அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்துள்ளார். இரவு 8 மணிக்கு மேல் பிரதிமாவை அவரது சகோதரர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அவரது அழைப்புக்கு பதில் இல்லை. இதையடுத்து அவர் மறுநாள் தனது சகோதரியின் வீட்டுக்கு நேரில் சென்றுள்ளார். அப்போது பிரதிமா கத்தியால் குத்தப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதையடுத்து அவர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் தடயங்களை சேகரித்து விசாரணையை தொடங்கினர். இதுகுறித்து பெங்களூரு காவல் துறை துணை ஆணையர் ராகுல் குமார் கூறுகையில், “பிரதிமா (45) கடந்த சனிக்கிழமை இரவு 8 மணிக்கு பணி முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

பிரதிமாவின் ஓட்டுநர்தான் அவரை வீட்டில் விட்டுள்ளார். அவரது கணவரும் மகனும் சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர். இந்தச் சூழலில் இரவு 8.30 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றிருப்பதாக தெரிகிறது. போதிய தகவல்கள் கிடைத்ததும்தான், என்ன நடந்துள்ளது என்பதை உறுதியாக சொல்ல முடியும்” என்றார்.

இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்படும் என்றும் குற்றவாளி களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE