ஆருத்ரா மோசடி: நடிகர் ஆர்.கே.சுரேஷ் டிச.10-ல் நாடு திரும்புவுதாக உயர் நீதிமன்றத்தில் தகவல்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: ஆருத்ரா மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷ் டிசம்பர் 10-ம் தேதி நாடு திரும்ப உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு ஆருத்ரா கோல்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது. முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக் கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான புகார்களின் அடிப்படையில் பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் கைதான ரூசோ என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாஜக ஓபிசி பிரிவு துணை தலைவரான ஆர்.கே.சுரேசுக்கு ஆருத்ரா மோசடியில் தொடர்பு உள்ளது தெரியவந்தது. அதனடிப்படையில் போலீஸ் விசாரணைக்கு உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராக ஆர்.கே.சுரேஷுக்கு பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை ரத்து செய்யக் கோரி ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதனிடையே, ஆர்.கே.சுரேஷுக்கு எதிராக சென்னை மத்திய பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர். தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள லுக் அவுட் நோட்டீசை திரும்ப பெற பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிடக்கோரி ஆர். கே. சுரேஷ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், “படத் தயாரிப்பு தொடர்பாகவே ரூசோ என்னை அணுகினார். அதுதொடர்பாக மட்டுமே பணப்பரிவர்த்தனை நடந்தது. ஆரூத்ரா மோசாடிக்கும் எனக்கும் தொடர்பில்லை. மேலும், தனது மனைவி மற்றும் குழந்தையை கவனித்து கொள்வதற்காக தற்போது துபாயில் உள்ளேன். நாடு திரும்பினால் கைது செய்யும் வகையில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. லுக் அவுட் நோட்டீஸ் காரணமாக நாடு திரும்பியதும் தாம் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. எனவே, அதனை திரும்ப பெற உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.கே.சுரேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.வீரராகவன், வரும் டிசம்பர் மாதம் 10-ம் தேதி ஆர்.கே. சுரேஷ் நாடு திரும்ப உள்ளதாக கூறினார். இது தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி நவம்பர் 8-ம் தேதி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அன்றைய தினத்துக்கே ஒத்திவைத்தார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE