மருதுபாண்டியர் குருபூஜையின்போது தொழிலதிபர் காரில் மர்ம வெடிபொருள் வீச்சு

By செய்திப்பிரிவு

சிவகங்கை: காளையார்கோவில் மருது பாண்டியர் குருபூஜையில் தொழிலதிபர் காரில் வீசப்பட்ட மர்ம வெடிபொருள் பலத்த சத்தத்துடன் வெடித்ததில் மேற்கூரை சிதறியது. இதனால், மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் மருது சகோதரர்கள் குருபூஜை அவர் களது நினைவிடத்தில் நேற்று நடைபெற்றது. மரியாதை செலுத்த அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் வந்தனர். அப்போது காளையார்கோவிலைச் சேர்ந்த தொழிலதிபர் ஞானப்பிரகாசம் (49) தனது கடையில் இருந்து வீட்டுக்கு காரில் சென்றார்.

கல்லல் சாலை சந்திப்பு அருகே வந்தபோது, குருபூஜைக்காக ஏராளமானோர் கூட்டமாக நடந்து வந்தனர். இதையடுத்து அவர் தனது காரை சாலையோரத்தில் நிறுத்தினார். கூட்டத்தில் வந்த சிலர், திடீரென காரில் மர்மப் வெடிபொருளை வீசினர். அது பலத்த சத்தத்துடன் வெடித்ததில் காரின் மேற்கூரை சிதறியது. சில பாகங்கள் சில அடி உயரத்துக்குச் சென்று கீழே விழுந்தன. ஞானப் பிரகாசம் உடனடியாக காரில் இருந்து இறங்கினார்.

பலத்த சத்தத்தைக் கேட்டு அங்கிருந்தோர் அலறியபடி சிதறி ஓடினர். வெடிபொருளை வீசியவர் களை போலீஸார் பிடிப்பதற்குள் தப்பிச் சென்றனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE