ஜார்க்கண்ட் | எருமை மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: 16 வயது சிறுவனை 4 பேர் தாக்கியதில் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் எருமை மாட்டின் மீது மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி உள்ளது. இதனால் 16 வயது சிறுவனை நான்கு பேர் தாக்கியதில் உயிரிழந்தார். போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது.

உயிரிழந்த சிறுவன் சந்தாலி தோலாவில் உள்ள குர்மஹாத் பகுதியை சேர்ந்தவர். அவர் தனது இரண்டு நண்பர்களுடன் கால்பந்து போட்டியை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பியுள்ளார். ஹன்ஸ்திஹா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ததி கிராமத்தில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. சிறுவன் பயணித்த மோட்டார் சைக்கிள் எருமை மீது மோதியதும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது எருமையின் உரிமையாளரிடம் இழப்பீடு தருவதாக சிறுவன் தெரிவித்துள்ளார்.

ஆனால், அவரை நான்கு பேர் கொடூரமாக தாக்கியுள்ளனர். சிறுவனுடன் வந்த அவரது இரண்டு நண்பர்கள் தாக்குதலுக்கு பயந்து தப்பி ஓடியுள்ளனர். தொடர்ந்து பலத்த காயமடைந்த சிறுவன் சமூக நல மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். இருந்தும் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் மக்கள், சிறுவனை தாக்கி கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் குற்றவாளிகளை இரண்டு நாட்களில் கைது செய்வதாக போலீஸ் அறிவித்தது. அதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE