ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் வசந்தா(67). நேற்று காலை வசந்தா, அவரது மகன் பிரகாஷ் (32), தங்கை சாவித்திரி (65) ஆகியோர் சென்னை செல்வதற்காக ஆம்பூர் ரயில் நிலையம் வந்தனர்.
அப்போது, 3 பேருக்கும் டிக்கெட் எடுப்பதற்காக பிரகாஷ்சென்றார். வசந்தாவும், சாவித்திரியும் முதலாவது நடைமேடையில் இருந்து 2-வது நடைமேடைக்கு செல்வதற்காக, அங்குள்ள ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றனர்.
அப்போது, அவ்வழியாக வந்த விரைவு ரயில் மோதியதில் சகோதரிகள் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு, அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் இருவரின் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ரயில் ஏற வந்த மூதாட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.