பழநியில் விஏஓக்களுக்கு கொலை முயற்சி: 2 திமுக நிர்வாகிகள் உட்பட 3 பேர் கைது

By ஆ.நல்லசிவன்

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் விஏஓக்கள் மீது கொலை முயற்சியில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகள் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பழநி அருகேயுள்ள கிழக்கு ஆயக்குடியில் கடந்த அக்.13-ம் தேதி மண் திருட்டை தடுக்க சென்ற கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட 3 பேர் மீது பாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த செங்கல் சூளை உரிமையாளர் சக்திவேல், பழநியை சேர்ந்த பாஸ்கரன், லாரி உரிமையாளர், ஓட்டுநர் உள்ளிட்டோர் கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, விஏஓ கருப்புசாமி தலைமையிலான விஏஓக்கள் ஆயக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து, திமுக நிர்வாகிகளான சக்திவேல், பாஸ்கரன், லாரி உரிமையாளர் உட்பட 6 பேர் மீது கொலை முயற்சி, அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல், சட்டவிரோத மண் திருட்டு உட்பட 4 பிரிவுகளின் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து, 6 பேரையும் தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று (அக்.18) பழநியைச் சேர்ந்த செங்கல் சூளை உரிமையாளர் மற்றும் திமுக நிர்வாகியான சக்திவேல் (58), அவரது மகன் காளிமுத்து (35), திமுக நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர் பாஸ்கரன் (45) ஆகியோரை ஆயக்குடி போலீஸார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE