“படம் ஓடவில்லை, கடன் தொல்லை...” - மாயமான கிருஷ்ணகிரி நடிகர் வேதனை

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியை சேர்ந்த நடிகர் தான் நடித்த படம் வெளியாகி, அதற்கு சரியான வரவேற்பு கிடைக்காததால் வேதனையில் மாயமாகியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள சென்னசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (40). இவர் ‘பூ போன்ற காதல்’ என்ற படத்தில் கதாநாயகனாக படித்துள்ளார். மேலும் அவரே கதை, திரைக்கதை ஆகியவற்றையும் எழுதி உள்ளார். இந்தப் படம் சமீபத்தில் வெளியானது. ஆனால், இந்தப் படத்துக்கு மக்களிடையே வரவேற்பு இல்லை. படம் ஓடாததால் வேதனை அடைந்த சுரேஷ் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறினார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. மேலும் அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அவர் தங்கி இருப்பதாக உறவினர்களுக்கு தகவல் வந்து அங்கு சென்று பார்த்தனர். அப்போது அவர் விடுதியில் இருந்து சென்றது தெரிய வந்தது. இது தொடர்பாக அவரது தாய் லட்சுமி கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சுரேசை தேடி வந்தனர்.

இந்த நிலையில், சுரேஷ் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசியது: “எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். இந்த படத்தை முடிக்க சென்சார் சான்றிதழ் வாங்க ரூ.5 லட்சம் கடன் வாங்கினேன். இப்போது கடன் பிரச்சினை எனக்கு உள்ளது. இந்தப் படத்தை நம்பி தான் நான் இருந்தேன். ஆனால் 20 டிக்கெட் கூட வரவில்லை. இப்படியே சென்றால் கண்டிப்பாக என்னால் உயிர் வாழ முடியாது. ஏராளமானோரிடம் கடன் வாங்கி உள்ளோம். அவர்கள் உதவி செய்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றி. நாளை நான் கண்டிப்பாக உயிரோடு இருக்க மாட்டேன்.

நான் உயிரோடு இருக்க வேண்டும் என்றால் எனக்கு உதவி செய்ய வேண்டும். நான் சாவதற்கு முன்பு இந்த செய்தியை போட்டால் இந்தபடத்தை பார்க்க எப்படியும் 100 பேர் வருவார்கள். அப்போதுதான் எனது பிரச்சினை கொஞ்சம், கொஞ்சமாக தீரும். அப்படி இல்லையென்றால் நாளை நான் உயிரோடு இருக்க மாட்டேன். நிறைய பேரை கஷ்டப்படுத்தி விட்டேன். இது போன்று யாரும் படம் எடுக்காதீர்கள். நிறைய பணம் இருந்தால் மட்டும் படம் எடுங்கள்” என்று அவர் பேசினார்.

இந்த வீடியோவை அவர் தான் நடத்தி வரும் யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். அதை அவரது நண்பர்கள் பார்த்து குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE