விருதுநகரில் சாலையோரம் நின்ற லாரி மீது பைக் மோதி சிறப்பு எஸ்.ஐ. உயிரிழப்பு; காவலர் காயம்

By இ.மணிகண்டன்

விருதுநகர்: விருதுநகரில் சாலையோரம் நின்று இருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், காவலர் ஒருவர் காயமடைந்தார்.

விருதுநகர் சூலக்கரை வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் (59). சூலக்கரை காவல் நிலையத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளராக (எஸ்.எஸ்.ஐ) பணியாற்றி வந்தார். நேற்று இரவு டவர் திருட்டு போனது வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த மருத நத்தம் கிராமத்துக்கு தனது பைக்கில் புறப்பட்டார். அவருடன், சூலக்கரை காவல் நிலைய முதல் நிலை காவலர் கார்த்திகேயன் (40) என்பவரும் உடன் சென்றுள்ளார். பைக்கை சிறப்பு எஸ்.ஐ. புஷ்பராஜ் ஓட்டிச் சென்றுள்ளார்.

திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எம்.ஜி.ஆர். சாலை சந்திப்பு அருகே சென்றபோது, சாலையோரத்தில் பழுதாகி நின்றிருந்த லாரியின் பின்பக்கத்தில் பைக் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், எஸ்.எஸ்.ஐ. புஷ்பராஜ், காவலர் கார்த்திகேயன் இருவரும் பலத்த காயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த மேற்கு காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்த இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே எஸ்.எஸ்.ஐ. புஷ்பராஜ் உயிரிழந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட காவலர் கார்த்திகேயன் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்துக் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், விபத்து ஏற்பட காரணமாக இருந்த தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள குமரி குளத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மாரிச் செல்வம் (29) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE