மதுரை: கொலை மிரட்டல் புகாரில் யூடியூபர் 'ரவுடி பேபி' சூர்யா, சிக்கந்தர் ஆகியோர் மதுரையில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாநகர் கான்சாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சித்ரா. மக்கள் பார்வை கல்வி அறக்கட்டளை நடத்துகிறார். மேலும், மக்கள் பார்வை என்ற யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். சித்ராவுக்கு யூடியூபர்களான சுப்புலட்சுமி என்ற ‘ரவுடி பேபி’ சூர்யா, சிக்கந்தர் என்கிற சிக்கா மற்றும் சூசைமேரி, ஹரிகுமார் ஆகிய 4 பேரும் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தனது அந்தரங்க புகைப்படத்தை வெளியிடபோவதாக மிரட்டுவதாகவும் கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
இந்நிலையில், சைபர் கிரைம் காவல் துறையினர் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி சுப்புலட்சுமி என்ற ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தர் என்கிற சிக்கா மற்றும் சூசைமேரி, ஹரிகுமார் ஆகிய 4 பேர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை ரவுடிபேபி சூர்யா மற்றும் சிக்காவை மதுரையில் வைத்து காவல் துறையினர் கைது செய்தனர்.