நியோ மேக்ஸ் மோசடியில் பெண் இயக்குநர் உட்பட மேலும் 2 பேர் கைது

By என்.சன்னாசி

மதுரை: நியோ மேக்ஸ் மோசடி வழக்கில் பெண் இயக்குநர் உட்பட மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நியோ-மேக்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் மதுரை உட்பட பல்வேறு ஊர்களில் கிளைகளை உருவாக்கி, கூடுதல் வட்டி,டெபாசிட் பணத்துக்கு இரட்டிப்பு தொகை முதலீடுகளை ஈர்த்தன. இதன்மூலம் பல கோடி ரூபாய் வசூலித்து,வீட்டு மனைகள், மருத்துவமனை, கல்லூரிகளை வாங்கி முறைகேடு செய்ததாக புகார்கள் எழுந்தன.

பாதிக்கப்பட்டோர் கொடுத்த புகார்களின் பேரில், மதுரை பொருளாதார குற்றத் தடுப்பு போலீஸார் நியோ மேக்ஸ் துணை நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் மதுரை கமலக்கண்ணன் பாலசுப் பிரமணியன், திருச்சி வீரசக்தி உள்ளிட்ட இயக்குநர்கள், முகவர்கள் என, சுமார் 90க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு வழக்குப் பதிவு செய்துள்ளனர். பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு எஸ்.பி. ஜோஸ் தங்கையா உத்தரவின்பேரில், சிறப்பு டிஎஸ்பி மணிஷா தலைமையிலான தனிப்படையினர் இந்த மோசடி தொடர்பாக தீவிரமாக விசாரிக்கின்றனர்.

இவ்வழக்கில் நபர்களை தொடர்ந்து தேடுகின்றனர். ஏற்கனவே, தேவகோட்டை சைமன் ராஜா, மதுரை கபில், தூத்துக்குடி இசக்கி முத்து, சகாய ராஜ், மதுரை பைபாஸ் ரோடு எல்ஐசி அதிகாரி பத்மநாபன்,விருதுநகர் மீனாட்சிபுரம் மாரிச்சாமி, சிவகங்கை மாவட்டம், குமாரபட்டி மலைச்சாமி உட்பட 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இருப்பினும், தொடர்ந்து தலைமறைவாக இருந்த முக்கிய நிர்வாகி கமலக்கண்ணன், அவரது சகோதரர் சிங்கார வேலன் ஆகியோரை டிஸ்பி மணிஷா தலைமை யிலான தனிப்படையினர் சென்னையில் வைத்து சமீபத்தில் கைது செய்தனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து பல்வேறு தகவல்களை சேகரித்துள்ளனர்.

இந்நிலையில், நியோ மேக்ஸ் துணை நிறுவனமான ரோபோக்கோ பிராப்ரட்டிஸ் என்ற நிறுவனத்தின் இயக்குநர் தேவகோட்டை மைக்கேல் செல்வி (45), தென்காசியிலுள்ள சென்ட்ரியோ, 7 அதர்ஸ் கம்பெனியின் இயக்குநர் நடேஷ் பாபு(52) ஆகியோரை மதுரையில் தனிப் படையினர் வைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் இதுவரையிலும், 13 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், பாதிக்கப்பட்டோர் தொடர்ந்து புகார்கள் கொடுப்பதாகவும் பொருளாதார குற்றத்தடுப்பு போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE