அருப்புக்கோட்டை அருகே கட்டிடத் தொழிலாளி மர்மமான முறையில் கொலை: போலீஸார் விசாரணை

By இ.மணிகண்டன்

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கட்டிடத் தொழிலாளி ஒருவர், உடலில் கத்திக் குத்துக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் கணபதி. இவருக்கு சரவணக்குமார் (24), ராஜா (21), சசிக்குமார் (18) என 3 மகன்கள் உண்டு. இதில் முதல் மகன் சரவணக்குமார் திருமணம் முடிந்து தந்தை கணபதி வீட்டின் அருகே குடியிருந்து வருகிறார். கணபதியின் 3-வது மகன் சசிக்குமார் கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

குடிப்பழக்கம் காரணமாக வேலைக்குச் செல்லாமல் இருந்த சசிக்குமார், இரவில் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டில் உள்ளோரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று அதிகாலையில் வீட்டின் பின்பக்க அறையில் உறங்கிக் கொண்டிருந்த சசிக்குமார் மர்மமான முறையில் கத்திக் குத்துக் காயங்களுடன் சடலமாக கிடப்பதை கண்டு வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து, அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்தில் எஸ்.பி. ஸ்ரீனிவாசபெருமாள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன், பாலமுருகன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். குடும்பப் பிரச்சினை காரணமாக சசிக்குமார் கொலை செய்யப்பட்டாரா அல்லது குடிபோதையில் வேறு யாரும் சசிக்குமாரை கொலை செய்தார்களா என்ற கோணத்தில் வழக்குப் பதிந்து அருப்புக்கோட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE