சென்னை - சைதாப்பேட்டையில் மேற்கூரை விழுந்து விபத்து: பெட்ரோல் பங்க் மேலாளர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் நேற்று முன்தினம் மாலை பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. அப்போது, சைதாப்பேட்டை கிழக்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் மேற்கூரை திடீரென சரிந்து விழுந்தது.

இதில், மழைக்காக ஒதுங்கி நின்றவர்கள், பெட்ரோல் போட வந்தவர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் இடிபாடுகளில் சிக்கினர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கிய 5 வயது குழந்தை உள்ளிட்ட 18 பேரை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பெட்ரோல் பங்க் ஊழியர் மதுராந்தகம் கந்தசாமி உயிரிழந்தார். மேலும், பலத்த காயமடைந்த 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் லேசான காயங்களுடன் சிகிச்சை முடிந்து, வீடு திரும்பினர். விபத்து குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், பெட்ரோல் பங்க் மேற்கூரை அமைக்கப்பட்டு 17 ஆண்டுகளானதாகவும், பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருந்ததால் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து நேரிட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து பெட்ரோல் பங்க் உரிமையாளர் அசோக் குமார், மேலாளர் வினோத் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, வினோத்தை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள உரிமையாளர் அசோக் குமாரைப் போலீஸார் தேடி வருகின்றனர். இதற்கிடையில், விபத்து நேரிட்ட பெட்ரோல் பங்கை சுற்றி தடுப்புகள் அமைத்து, பங்க்-க்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE