திருப்பூர்: பெருமாநல்லூர் அருகே மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை கொலை செய்த வழக்கில், பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பெருமாநல்லூரை அடுத்த ராக்கியாபட்டி சுடுகாடு அருகே வட மாநில பெண் ஒருவர், கடந்த 25-ம் தேதி கொலை செய்யப்பட்ட நிலையில், காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார். சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் சடலத்தை கைப்பற்றி, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக பெருமாநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியில் வசித்து வந்தவர் மகாராஷ்டிராம் மாநிலத்தை சேர்ந்த பெண் சீத்தல் ரகசி (32) என்பது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. பெருமாநல்லூர் முட்டியங்கிணறு பகுதியில் வசித்து வந்தவர் பிஹாரைச் சேர்ந்த வினய்குமார் (32). வினைகுமாரின் நண்பர் திருப்பூர் பாண்டியன் நகரில் வசித்து வரும் பிஹாரை சேர்ந்த விகாஷ்குமார் (33). இவர்கள் மூவரும் திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இதில் சீத்தல் ரகசிக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி கணவர் இறந்துவிட்டார்.
இந்நிலையில், திருமணம் செய்யாமல் வினய்குமாரும், சீத்தல் ரகசியும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இதற்கிடையே, வினய்குமாருக்கு திருமணத்துக்கு பெண் பார்ப்பதை அறிந்த, சீத்தல் ரகசி, வினய்குமாருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த வினய்குமார் மற்றும் நண்பர் விகாஸ்குமார் ஆகியோர் சேர்ந்து, சீத்தல் ரகசியை பெருமாநல்லூரில் ராக்கியாப் பட்டிக்கு அழைத்து வந்து கழுத்தை நெரித்து, கல்லால் தாக்கி கொலை செய்தது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பெருமாநல்லூர் போலீஸார், வினய்குமார், விகாஸ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.