கரூர் | திமுக பெண் கவுன்சிலர் கொலை: கொடுமுடி தம்பதி கைது

By ஜி.ராதாகிருஷ்ணன்

கரூர்: ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பேரூராட்சி பெண் கவுன்சிலர் கொலை வழக்கில் கொடுமுடியைச் சேர்ந்த தம்பதியை க.பரமத்தி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகேயுள்ள சென்னசமுத்திரம் பேரூராட்சி 7வது வார்டு திமுக கவுன்சிலர் ரூபா (47). இவர் கரூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு வீட்டு வேலைக்கு வந்து சென்றுள்ளார். இந்நிலையில் கரூர் மாவட்டம் பவித்திரம் பாலமலை காட்டுப்பகுதியில் தலையில் காயங்களுடன் ரூபா சடலமாக நேற்றுமுன்தினம் கிடந்தார்.

அவர் அணிந்திருந்த தங்கச்சங்கிலி, தோடு, வெள்ளிக்கொலுசு உள்ளிட்டவைகளை காணவில்லை. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த க.பரமத்தி போலீஸார் ரூபாவுடன் வீட்டு வேலைக்கு செல்லும் ஈரோடு மாவட்டம் கொடுமுடி சாலைப் புதூரை சேர்ந்த நித்யா (33), கதிர்வேல் (37) தம்பதியை நேற்று (செப். 27ம் தேதி) பிடித்து விசாரித்தனர்.

ரூபா தங்க செயின்கள், மோதிரம், கம்மல், காது மாட்டல்களுடன் வேலைக்கு வருவதால் நகைக்காக ஆசைப்பட்டு நேற்று முன்தினம் பவித்திரத்தில் ஒரு வீட்டில் வேலை இருப்பதாகக்கூறி நித்யா மற்றும் அவரது கணவர் கதிர்வேல் ஆகியோர் ரூபாவை இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்று அவரை தாக்கிக் கொலை செய்து விட்டு அவரிடமிருந்து 7 பவுன் சங்கிலி, தோடு, கொலுசு ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து க.பரமத்தி போலீஸார் இ ருவரையும் நேற்று (செப். 27ம் தேதி) கைது செய்து நகைகளை மீட்டு இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE